முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று போராட்டம்: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமல்

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை (மே 23) காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 22 மே, 2018 at 2:09 AM
பகிர்:

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை (மே 23) காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை (மே 22) முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக, நடைபெற்ற பேச்சுவார்த்தையில், போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்ட நிலையில், முற்றுகைப் போராட்டத்துக்குப் பதிலாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளித்தனர். இதற்கிடையே, "சமரச பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட "வீராங்கனை' அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமாபாபு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதால் அவரை போராட்டக் குழுவில் இருந்து நீக்குவதாகவும், அறிவித்தபடி செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்' என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றியும், போராட்டம் நடைபெற்று வரும் கிராமங்களிலும், மாநகரப் பகுதியிலும் திங்கள்கிழமை இரவு போலீஸார் குவிக்கப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலை முன்பும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸாரும், தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸாரும் என 2,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் பலரை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.
144 தடை உத்தரவு: இதற்கிடையே, தூத்துக்குடி மாநகரில் சட்டம் }ஒழுங்கை பராமரித்திடும் வகையில், திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை (மே 23) காலை 8 மணி வரை, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைகளுக்குள்பட்ட பகுதிகள் முழுவதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.