தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்
தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக புதன் அன்று துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் பார்க்கச் சென்ற உறவினர்கள் மீது, போலீஸ் மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. இதில் ஒரு வாலிபர் பலியானார். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
Advertisement
இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விடியோக்கள் மற்றும் ஆடியோ தகவல்கள் அலைபேசி இணைய சேவை வழியாக பல்வேறு இடங்களில் அனைவராலும் பகிரப்படுகின்றன. போராட்டக்காரர்களின் ஒருங்கிணைப்புக்கும் இதுவே உதவுகிறது. ஆனால் இதன் மூலம் வதந்திகளும் பரப்படுவதாக காவல்துறை கருதுகிறது.
எனவே தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமை முழுமையாக சீரடைந்த பிறகு இணையதள சேவை மீட்கப்படும் என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.