சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு அனுமதித்துள்ள நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில், தீபாவளிப் பண்டிகையன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் நேரம் நிர்ணயம் செய்திருந்தது.
இரண்டு மணி நேரம் போதாது என்பதால், கூடுதலாக இரண்டு மணி நேரத்தை தமிழக அரசு கோரியது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இரண்டு மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
தலா ஒரு மணி நேரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு அனுமதித்துள்ள நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும்.
பொதுவாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிக அளவில் பட்டாசு வெடிப்பார்கள். எனவே அவர்களுக்கு அறிவுரை வழங்கி நீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்தப்படும்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும் தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாங்காத தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.