தமிழ்நாடு

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

DIN


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நாள்தோறும் அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலை 4 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. தலையில் வைர கிரீடத்துடன், தங்க அங்கி அணிந்து சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரையும், பன்னிரு கரங்களுடன் வேல் சாத்தப்பட்டு வெற்றி வேலனாக காட்சியளித்த சண்முகரையும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதன்பின் காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்கள் நடந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு சஷ்டி சிறப்புத் தீபாராதனையும், உச்சிகால தீபாராதனையும் நடந்தது. அதன்பின் யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்புத் தீபாராதனையாகி, சுவாமி அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரமாகி மாலை 4.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
முன்னதாக, சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக திருக்கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முதலில் கடற்கரையில் மாலை 5.12-க்கு கஜமுக சம்ஹாரம் நடைபெற்றது. இரண்டாவதாக மாலை 5.26-க்கு ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார். முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்தார். மூன்றாவதாக மாலை 5.40-க்கு சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்தார். அவரை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன்பிறகும் ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாலை 5.54-க்கு மாமரமாக உருவெடுத்து மீண்டும் போருக்கு வந்தார். 
முருகப்பெருமான் மாமரமாக வந்த சூரபத்மனின் ஆணவத்தை ஆட்கொண்டு அவரை சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்தார். அந்தச் சேவலையே முருகப்பெருமான் தனது கொடியாக கொண்டதால் சேவற்கொடியோன் என்ற பெயரையும், அந்த மயிலையே தனது வாகனமாக கொண்டதால் மயில்வாகனன் என்ற பெயரையும் கொண்டவர் ஆனார்.
ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போர் புரியும்போது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுந்தர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி, எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ராமச்சந்திரன், கூடுதல் ஆணையர் திருமகள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அறநிலையத் துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT