கஜா புயல் காரணமாக சென்னை மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் இடையே இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கஜா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயல் இன்று கரையைக் கடக்கவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பிற்பகல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் உத்தரவின்படி இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.