கஜா நிவாரணப் பணிகள் குறித்து 29-இல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து வரும் 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து வரும் 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கஜா புயல் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் கூறியிருந்தாவது
Advertisement
Advertisement
கஜா புயல் தாக்குதலுக்குப் பிறகு தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மக்களுக்கு சரியான உணவு, குடிநீர் மற்றும் மின்சாரம் வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். பலியான விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தாததால், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பல கிராமங்கள் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு நிவாரண நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடக்கின்றது. மத்திய அரசும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்… உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புது வீடுகள் கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானத்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புயல் நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு எடுக்கப்படும் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், புயல் பாதிப்பு குறித்து பிரதமர், முதல்வரிடம் கேட்டறிந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரே இரவில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியாது எனக் கூறி, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்
அதன்படி அந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கஜா புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வரும் 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.