சபரிமலை தீர்ப்பு: தமிழகமெங்கும் பக்தர்கள் எதிர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் உள்ளிட்ட
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் திங்கள்கிழமை கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு விதங்களில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அம்பாசமுத்திரத்தில்...: உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரீசிலனை செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அம்மையப்பர் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவை சங்கம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாரம்பரிய நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்று வேண்டிக் கொண்டனர்.
கூட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
களியக்காவிளையில்...: கேரளத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
இந்த விக்ரகங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு குழித்துறை வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த இந்து இயக்க நிர்வாகிகள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பி, தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து, சுவாமி விக்ரகங்கள் திங்கள்கிழமை களியக்காவிளைக்கு வந்தன. இங்கு கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு கேரளத்துக்கு சுவாமி விக்ரகங்கள் கொண்டுசெல்லபட்டன.
முன்னதாக, களியக்காவிளையில் சுவாமி விக்ரக ஊர்வலத்துக்கு முன்னால் களியக்காவிளை மண்டல பாஜக தலைவர் எஸ்.ஆர். சரவண வாஸ் நாராயணன் தலைமையில், பல்வேறு இந்து இயக்க நிர்வாகிகள் திரண்டு, கேரள அரசை கண்டிக்கும் வகையில், சரண கோஷம் முழங்க கேரள எல்லைப் பகுதி வரை பஜனை ஊர்வலம் சென்றனர்.
குலசேகரத்தில்...: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருகே களியல் அய்யப்ப சேவா சங்கம் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பக்கோணத்தில்...: சபரிமலையில் பழைய நடைமுறையே நீடிக்க வேண்டி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கும்பகோணத்தில் திங்கள்கிழமை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பின் பரிந்துரையின்படி, தஞ்சை மாவட்டம் சார்பில் கும்பகோணம் சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய பழைய நடைமுறையே நீடிக்க வேண்டும், சபரிமலையின் புனிதத்தன்மையை தொடர்ந்து கடைப்பிடித்து, பாரம்பரிய முறைப்படியே சடங்கு, சம்பிரதாய வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து சுந்தரமூரத்தி விநாயகருக்கும், ஐயப்ப சுவாமிக்கும் அபிஷேக, அலங்காரம் செய்விக்கப்பட்டு, ஆராதனை நிகழ்த்தப்பட்டது.
உடன்குடியில்...: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, இந்து முன்னணி மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அச்சன்கோவிலில்...: சபரிமலை பாரம்பரிய ஐதிகங்களை பாதுகாக்க வேண்டி அச்சன்கோவில் ஷேத்திர கமிட்டி மற்றும் திருஆபரண கமிட்டி சார்பில் அச்சன்கோவிலில் ஐயப்ப சரண கோஷத்தோடு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அச்சன்கோவில் நடைபந்தலில் தொடங்கிய ஊர்வலம் ஊர் எல்லை வரை சென்று பின் தர்மசாஸ்தா கோயிலில் நிறைவுபெற்றது. இதில் , நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களும், பெண்களும் கலந்துகொண்டணர்.
கூட்டத்தில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீகங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சபரிமலைக்கு செல்லமாட்டோம். 50 வயது நிறைவடைந்த பின்னரே சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
பெண்கள் உறுதிமொழி:
வெள்ளக்கோவில் குமாரவலசில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை கணபதி பூஜை, கலசபூஜை, புஷ்பாஞ்சலி, தன்வந்திரி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. இவற்றில் கலந்து கொண்ட நூற்றுக்கும் அதிகமான பெண்கள், 10 வயதுக்கு மேல் 50 வயது வரை உடைய பெண்கள் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்ல மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
13இல் சரண கோஷ பேரணி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளஅரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சனிக்கிழமை (13ஆம் தேதி) உதகையில் சரண கோஷ பேரணி நடத்தப்படுகிறது.