ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
புது தில்லி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இயங்கிவரும் சிபிஐ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஸ்டெர்லைட் வன்முறை சம்பவம் தொடர்பாக புதிதாக 12 பிரிவுகளின்கீழ் கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
அதேவேளையில், இந்த வழக்குத் தொடர்பாக தமிழக போலீஸார், ஏற்கெனவே விசாரணை செய்த நபர்களிடமும், வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் முதல்கட்டமாக விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தூத்துக்குடியில் முகாமிட்டு ஓரிரு நாள்களில் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்ப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில், இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக காவல்துறை முழுத் தகுதி பெற்ற அமைப்பு என்றும், எனவே மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.