தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென் மாநில மொழி சேனல் தொகுப்புகள் அரசு கேபிள் தொலைக்காட்சி மூலமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் 205 சேனல்கள் கொண்ட தொகுப்பை ரூ.125 என்ற மாத சந்தா கட்டணத்திலும், 287 சேனல்கள் கொண்ட தொகுப்பை ரூ.175 என்ற மாத சந்தா கட்டணத்திலும், 407 சேனல்களைக் கொண்ட எச்.டி. தரம் கொண்ட தொகுப்பை ரூ.225-க்கும் வழங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வாழும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பேசும் வாடிக்கையாளர்கள் தேவையைக் கருத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனி சேனல் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைச்சர் எம்.மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் சேனல் தொகுப்புகளில் தலா 223 சேனல்கள் ரூ.175 மாத சந்தாக் கட்டணத்தில் அளிக்கப்படும். இந்த கட்டணத்தில் கேபிள் தொலைக்காட்சி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.100-ம், தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.75-ம் பங்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.