கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த கனரக வாகனத்தை வியாழக்கிழமை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் உத்திரவின் பேரில் சுகாதாரத்துறையினர் வாகனங்களை சோதனையிட்டனர்.
அப்போது, கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்த முயன்றபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் லாரியை சோதனையிட்ட போது,கோழி இறைச்சியின் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் இருந்தது தெரியவந்தது.
கேரளாவில் இத்தகைய கழிவுகளை கொட்டுவதற்கு தடை உள்ளது. எனவே அங்குள்ள வியாபாரிகள், தமிழகத்திற்கு செல்லும் லாரிகளில் குறைந்த வாடகை பேசி இங்கு அனுப்பிவிடுகின்றனர். கனரக ஓட்டுநர்களும் இந்த கழிவுகளை குற்றாலம், செங்கோட்டை,
தென்காசி பகுதியில் ரோட்டோரம் மற்றும் மறைவிடங்களிலோ அவற்றை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்.
இத்தகைய கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே கழிவுகளை ஏற்றி வந்த கனரக வாகனத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் ரகுபதி, செல்வமுருகன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் மதுரையை சார்ந்த ஆனந்தன், கிளீனர் சிவகங்கையை சார்ந்த ஞானசேகர் ஆகிய இருவரையும் புளியரை போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து புளியரை போலீசார் இறைச்சி கழிவு ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்த இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.