வணிகர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு திமுக ஆதரவு
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை (அக். 23) தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் திமுக தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை (அக். 23) தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய - மாநில அரசுகளால் இந்திய சிறு, குறு வணிகர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில், அக்டோபர் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு திமுக சார்பில் மனப்பூர்வமான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்தியில் உள்ள பாஜக அரசாலும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசாலும் வணிகர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் முறையற்ற செயல்பாடு, சுங்கக் கட்டண உயர்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு மற்றும் குறு தொழில்கள் முடக்கம் போன்றவற்றால் வர்த்தகம் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் தாக்குதலுக்கு உள்ளாகி நிற்கிறது.
எனவே, வணிகர்களின் கோரிக்கைக்கும், ஜனநாயக ரீதியிலான அவர்களின் போராட்டங்களுக்கும் திமுக என்றைக்கும் துணை நிற்கும். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.