தமிழ்நாடு

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் திருநங்கைக்கு இடம் ஒதுக்கீடு

DIN


சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணை, மாநில மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை ஆகியவற்றின்படி, திருநங்கைக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநங்கை எஸ்.தமிழ்ச்செல்வி. கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தமிழ்ச்செல்வி 74 சதவீத மதிப்பெண் பெற்றார். இதையடுத்து, வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தார். 
ஆனால், செவிலியர் படிப்பில் திருநங்கைகள் சேருவதற்கு சட்டத்தில் இடமில்லை எனக் கூறி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தமிழ்ச்செல்வியின் விண்ணப்பத்தை நிராகரித்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்ச்செல்வி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ்ச்செல்விக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்க உத்தரவிட்டது. ஆனால், தமிழ்ச்செல்வியை சேர்த்துக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தமிழ்ச்செல்வி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், திருநங்கை என்பதற்காக தமிழ்ச்செல்வியின் கல்வி உரிமையை மறுப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, தமிழ்ச்செல்வி விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அவர் செவிலியர் படிப்பு படிப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், 2018-19-ஆம் கல்வி ஆண்டிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பட்டயப் படிப்பில் தமிழ்ச்செல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இடம் ஒதுக்கீடு: இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரனை திருநங்கை தமிழ்ச்செல்வி திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT