தாராபுரம் அருகே 10 நாய்கள் விஷம் வைத்துக் கொலை: மணல் கொள்ளையர்கள் காரணமா?
தாராபுரம் அருகே 10 நாய்கள் ஞாயிற்றுக்கிழமை விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம் அருகே 10 நாய்கள் ஞாயிற்றுக்கிழமை விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம் அருகே உள்ள ஆத்துக்கால் புதூர், நல்லகுமார கவுண்டன் புதூர், கருக்கம்பாளையம் , கவுண்டய்யன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பல முறை எச்சரித்தும், அரசு அலுவலகத்தில் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. இதுவரை அமராவதி ஆற்றில் 20 அடிக்கு ஆழத்துக்கு மேலாக மணல் அள்ளப்பட்டுவிட்ட நிலையில் இனி அங்கு பாறைகள் மட்டுமே உள்ளன. இதே நிலை இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நீடித்தால் அங்கு குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆத்துக்கால்புதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 10க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் வருவாய்த் துறை மற்றும் கால்நடைத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மணல் அள்ளுவதற்கு இடையூறாக இருந்த காரணத்தால் மீன்களில் விஷத்தை தடவி, அதை நாய்களுக்கு உணவாக கொடுத்து மணல் கொள்ளையர்கள் அவற்றைச் சாகடித்துள்ளனர். நாளை மனிதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் இனியாவது தீவிர நடவடிக்கை மேற்கொள்வதுடன், நாய்களை விஷம் வைத்துக் கொன்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.