புன்னக்காயலில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை படகுகளில் கருப்புக் கொடி கட்டி கடலுக்குள் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை படகுகளில் கருப்புக் கொடி கட்டி கடலுக்குள் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விசைப்படகுகளின் அத்துமீறல்களை கண்டிப்பதாகக் கூறி, படகுகளில் கருப்புக் கொடி கட்டியும் கடலுக்குள் இறங்கி நின்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டுப்படகுகளை விசைப்படகுகளின் அத்துமீறல்களிலிலிருந்து காப்பாற்ற வேண்டும்; நாட்டுப்படகு மீனவர்களுக்காக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் போடப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; பதிவு செய்யாத விசைப்படகுகளை உடனே வெளியேற்ற வேண்டும்; சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு புன்னக்காயல் ஊர் கமிட்டி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கப் பொருளாளர் யூஜின் ரொட்ரிகோ, கடற்கரை கமிட்டி தலைவர் சுரேஷ், ஆலய கமிட்டி தலைவர் டெலிலிக்கட் லோபோ, மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 800 நாட்டுப்படகு மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தை முன்னிட்டு அங்கு சுமார் 365 நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.