பேராசிரியர் மீது பாலியல் புகார்: வேளாண் கல்லூரி மாணவியிடம் பல்கலை. ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை
திருவண்ணாமலை அருகே கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த வேளாண் கல்லூரி மாணவியிடம், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை அருகே கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த வேளாண் கல்லூரி மாணவியிடம், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி-ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.
இங்கு 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த மாணவிக்கு, அந்தக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி மாணவியிடம் விசாரணை நடத்தி, காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளித்தார். இதன் அடிப்படையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்குழுவிடம் உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பெண் உதவிப் பேராசிரியர்கள் மைதிலி, புனிதா ஆகியோருக்கு எதிரான ஆடியோ, எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை மாணவி அளித்தார்.
இந்நிலையில், கோவையில் இருந்து வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் சாந்தி தலைமையிலான 5 பேர் குழுவினர் வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்தனர். இக்குழுவினர் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முழுவதும் விடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் சாந்தி, மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.