மரங்களில் அடிக்கப்பட்ட 5 கிலோ ஆணிகள் அகற்றம்
கடலூரில் மரங்களில் அடிக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ எடையிலான ஆணிகளை இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
கடலூரில் மரங்களில் அடிக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ எடையிலான ஆணிகளை இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
கடலூர் நகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் மீது பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தகடுகள் ஆணிகள் மூலம் அடிக்கப்பட்டிருந்தன. இந்த ஆணிகளை அகற்ற கடலூர் சிறகுகள் அமைப்பினர், கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 பேர் 3 குழுக்களாகப் பிரிந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
பழைய ஆட்சியரக சாலை, வணிக வரித் துறை அலுவலக சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை நெம்புகோல் உதவியுடன் அகற்றினர். சுமார் 75 மரங்களிலிருந்து 5 கிலோ ஆணிகளை அகற்றினர்.
இதுகுறித்து கடலூர் சிறகுகள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்தப் பணி சவாலாக அமைந்தது. சில மரங்களில் பெரிய அளவிலான இரும்புக் கம்பிகள், "யு' வடிவிலான கிளாம்புகள் அடிக்கப்பட்டிருந்தன. இதனால், சில மரங்களின் கிளைகள் பலவீனமடைந்து உடைந்தன. இந்தப் பணியை வரும் நாள்களிலும் தொடர உள்ளோம். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.