பொது நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த எம்.சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால் எங்களைப் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் பயன்பெற்றனர். ஆனால், சமீபகாலமாக ஆடல், பாடல்கள் நடத்தும் தனியார் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் இரட்டை அர்த்த வசனங்கள் அடங்கிய பாடல்களுக்கு அரைகுறை உடைகளுடன் நடனமாடுகின்றனர். இதனால் திருவிழாக்களுக்கு வரும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
எனவே தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர், சுற்றுலாத்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.