8 வழிச்சாலை திட்டத்தில் பொதுமக்களையோ, விவசாயிகளையோ துன்புறுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் அரூரில் வெட்டப்பட்ட மரங்களுக்காக 1200 மரங்கள் நட இருப்பதாக தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை தொடர முடியாது. சுற்றுச்சூழல் துறை அனுமதி அவசியம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தில் நிலம் தர விருப்பம் இல்லாதவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தெரிவித்த உயர் நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.