முகப்பு
தமிழ்நாடு

கேள்விக்குறியாகும்  யானைகளின் எதிர்காலம்

யானைகள்தான் காட்டில் மற்ற தாவர உண்ணிகள் வாழ மிகவும் உதவி புரிகின்றன. குறிப்பாக , யானைகள் வனப் பகுதியில் செல்லும் இடங்களை மற்ற சிறிய உயிரினங்கள் பாதைகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

Updated On : 1 அக்டோபர், 2018 at 10:35 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:27 PM

யானைகள்தான் காட்டில் மற்ற தாவர உண்ணிகள் வாழ மிகவும் உதவி புரிகின்றன. குறிப்பாக , யானைகள் வனப் பகுதியில் செல்லும் இடங்களை மற்ற சிறிய உயிரினங்கள் பாதைகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. வறட்சிக் காலங்களில் உயரமான மரங்களில் இருந்து யானைகள் உடைத்துப்போடும் கிளைகளை மற்ற தாவர உண்ணிகள் உணவுக்கு பயன்படுத்திக்கொள்கின்றன


பொள்ளாச்சி: தமிழக வனப் பகுதிகளில் கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 1,299 யானைகள் உயிரிழந்தன. இவற்றில் 28 யானைகள் வேட்டையாடப்பட்டும், 65 யானைகள் மின்சாரத் தாக்குதலிலும் பலியாகின. இந்த நிலைமை, யானைகளுக்கு மட்டுமல்லாமல், கானகத்துக்கே அச்சுறுத்தலாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

19-ஆம் நூற்றாண்டில் இமயமலையின் பனி படர்ந்த பகுதியைத் தவிர, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் யானைகள் வாழ்ந்துள்ளன. மக்கள்தொகையின் அதிவேக வளர்ச்சியால் இன்று யானைகளின் வாழ்விடம் சுருங்கி, இமயமலையின் அடிவாரப் பகுதியான தெராய், வடகிழக்கு இந்தியா, ஜார்க்கண்ட், ஒடிஸô போன்ற பகுதி, தென்னிந்தியாவில் கிழக்கு}மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள் உள்ளன. 

Advertisement

பாதுகாப்பு இல்லாமல் யானைகள் அழிந்து வருகின்றன என்பதை உணர்ந்த அரசு 1992}ஆம் ஆண்டு, யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி, இதுவரை 32 யானை காப்பகங்களை அறிவித்துள்ளது. இருப்பினும், அத்திட்டம் மந்த கதியில் செயல்படுவதை உணர்ந்து, அதனை முழுத்திறனுடன் செயல்படுத்தவும், யானைகளுக்கு உள்ள அச்சுறுத்தலைக் குறைக்கவும் ஆலோசனை வழங்க மகேஷ் ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக்  குழு, "கஜ' எனும் 187 பக்க அறிக்கையை 2010}ஆம் ஆண்டு அரசுக்கு சமர்ப்பித்தது. யானைகள் பாதுகாப்பு, பெருக்கத்துக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து அதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று, தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்.டி.சி.ஏ.) போன்று, தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.இ.சி.ஏ.) உருவாக்கப்பட வேண்டும் என்பது. இந்த ஆணையத்துக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், மத்திய வனத்துறை அமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு அமைத்து, அதில் யானைகள் பற்றி நன்கறிந்த விஞ்ஞானிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் உள்பட 15 நபர்கள் இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் காப்பகங்களைத் தணிக்கை செய்ய வேண்டும். காப்பகங்களில் ஆராய்ச்சிக் கூடம் அமைத்தல், காடு திருத்துதல், மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் என தேசிய யானைகள் ஆணையத்துக்கான பணிகளையும் பட்டியலிட்டது. 

யானைகள் பாதுகாப்பில் தற்போது மிகக் கடுமையான சிக்கல்களாவன } யானை } மனித மோதல், வேட்டை, மின்சார பலி, ரயில் விபத்து, சாலை விபத்து போன்றவையாகும். குறிப்பாக யானைகள் வேட்டையாடப்படுவது தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்றும் தொடர்கிறது. கடந்த 17 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 28 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 

தமிழகக் காடுகளில் தற்போது சுமார் 4 ஆயிரம் யானைகள் இருப்பதாக கூறப்பட்டாலும், "யானைகள் வழித்தடம்' எனப்படும் எலிஃபண்ட் காரிடார் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் சுருங்குதல், வாழ்விடம் துண்டுபடுதல் போன்றவற்றால் யானைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

யானைகள் தங்களது தோற்றத்துக்குத் தகுந்தாற்போல், தினமும் 150 கிலோ பசுந்தாள்கள், 100 லிட்டர் தண்ணீரை உள்கொள்கின்றன. தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, அவை ஆண்டுதோறும் 300 முதல் 400 சதுர கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. பருவநிலைக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது தங்கள் வாழ்விடங்களையும் மாற்றிக் கொள்கின்றன.

யானைகள்தான் காட்டில் மற்ற தாவர உண்ணிகள் வாழ மிகவும் உதவி புரிகின்றன. 

குறிப்பாக , யானைகள் வனப் பகுதியில் செல்லும் இடங்களை மற்ற சிறிய உயிரினங்கள் பாதைகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. வறட்சிக் காலங்களில் உயரமான மரங்களில் இருந்து யானைகள் உடைத்துப்போடும் கிளைகளை மற்ற தாவர உண்ணிகள் உணவுக்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இப்படி வனப் பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த யானைகள் தொடர்ந்து வேட்டையாடப்படுவது அவற்றின் எதிர்காலத்தை மட்டுமின்றி மற்ற  உயிரினங்களின் எதிர்காலத்தையும் கானகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

தமிழகத்திலேயே வேட்டையாடப்படும் யானைகளின் எண்ணிக்கை  தருமபுரி கோட்டத்தில்தான் அதிகம். அதேபோல, தமிழகத்திலேயே கோவை கோட்டத்தில்தான் மின்சாரத் தாக்குதலில் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளன. 

யானை வேட்டை, மின்சாரத் தாக்குதல், ரயில்}சாலை விபத்து சம்பவங்கள் நமது யானை இனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மின்சாரத் தாக்குதல், சாலை, ரயில் விபத்துகள் போன்றவை யானைகளின் காரிடார் எனப்படும் யானை வழித்தட ஆக்கிரமிப்பால் ஏற்படும் பிரச்னையே ஆகும். 

"கஜ' அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டால், இந்திய யானைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதுகுறித்து, சூழலியல் செயல்பாட்டாளர் மோகன்ராஜ் கூறியதாவது: 

யானைகளின் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. யானைகளின் இறப்பு விகிதத்தை அரசு குறைவாகவே வெளியில் தெரிவிக்கிறது. அதன் உண்மையான நிலவரம் வெளியில் தெரிவதில்லை. தற்போதும் தமிழகக் காடுகளில் வேட்டையாடப்படும் யானைகளின் எண்ணிக்கை அதிகம். மின்சார வேலிகள் முறைப்படுத்தப்படாமல் மின்சாரத் தாக்குதலில் யானை உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பாரம்பரிய வழித்தட ஆக்கிரமிப்புகள், ரயில் தடங்களில் யானை பலி என யானைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே "கஜ' அறிக்கைக்கு உயிர் தந்து, அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் மட்டுமே யானைகளைப் பாதுகாக்க முடியும் என்றார்.


ஆண்டு யானை உயிரிழப்பு      எண்ணிக்கை

2001     63
2002     72
2003     81
2004     56
2005     63
2006     58
2007     57
2008     87
2009     95
2010     79
2011     60
2012     89
2013   126
2014     90
2015     37
2016     61
2017   125
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.