மதுரையைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரும், பட்டிமன்றப் பேச்சாளருமாகிய தா.கு. சுப்பிரமணியன் (72) சனிக்கிழமை இரவு காலமானார்.
அவருக்கு மனைவி ஜமுனா, மகன் பல் மருத்துவர் வெங்கட்ரமணன் ஆகியோர் உள்ளனர். மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், நடன கோபாலநாயகி சுவாமிகள் இயற்றிய சௌராஷ்டிர மொழி கீர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பணியின்போதும், பணி ஓய்வுக்குப் பிறகும் பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார். இவருக்கு, தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்குகள், மதுரை, தவிட்டுச்சந்தை பகுதியில் உள்ள அழகர்சாமி நாயுடு சந்தில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தத்தனேரி மயானத்தில் தகனம் நடைபெறும். தொடர்புக்கு - 90806-25425.