புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் வன்முறையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 1000 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக கட்செவி அஞ்சலில் அவதூறாக சித்திரித்துப் பதிவிட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளிக்கிழமை காலை அந்த சமூக மக்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, நடைபெற்ற கல்வீச்சில் 8 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், 3 போலீஸார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். நிலைமை கட்டுக்குள் வராததால், துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
பொன்னமராவதி கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூலு, திருச்சி சரக காவல் துணைத் தலைவர் லலிதா லட்சுமி தலைமையில் சுமார் 800 போலீஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் பொன்னமராவதியில் வரும் 21 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக கூடி பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த அடையாளம் தெரியாத 1000 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு முடியும் வரையில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களில் காவல் துறையினர் ஒலிபெருக்கிகளில் அறிவிப்பு செய்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னமராவதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சனிக்கிழமையும் இயக்கப்படவில்லை; பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வாரச்சந்தை நடைபெறவில்லை. இருப்பினும், பொன்னமராவதியில் மெல்ல மெல்ல அமைதி திரும்பும் சூழல் நிலவுகிறது.