பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் (2019-2020) கட்டணம் உயர்த்தப்படும். இந்த முடிவுக்கு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காபி வாங்கிய அதே விலையில் இன்றைக்கு வாங்க முடியுமா? மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு கட்டண உயர்வு இருக்கும். மாணவர்களின் குடும்பச் சூழல் உள்பட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டே புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டணம் மாணவர்கள் சிரமப்படாமல் செலுத்தும் வகையில் இருக்கும் என்றார்.