மதுரை: மதுரை மத்திய சிறையில் வழக்கமான சோதனையின் போது கைதிகள் - போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் செவ்வாய் மதியம் 3 மணி அளவில் சிறையின் உள்ளேயுள்ள பிளாக்குகளில் தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிறை போலீசார் வழக்கமான சோதனைநடத்தினர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான இரண்டு கைதிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அனால் அவர்களை அழைத்துச் செல்வதை இதர கைதிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று போலீசார் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் சிறை காவலர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து கூடுதல் போலீசாரை சிறைக்கு வரவழைத்தனர். இதன் காரணமாக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அதிரடிப்படை காவலர்களை அங்கு கணிசமான அளவில் குவித்துள்ளார். இருந்த போதிலும் அங்கு தொடந்து பதற்றம் நிலவி வருகிறது.