சென்னை, துறைமுக பி.எஸ்.என்.எல்., அலுவலக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சேவைகளில் 75 சதவீதம் சீரமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாளில் முழுமையாகச் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, மண்ணடியில் உள்ள, துறைமுக பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், 29 ஆயிரம் லேண்ட்லைன் இணைப்புகள், 3,000 பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் 60 சிக்னல் கோபுரங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மேலும், அலுவலகத்தில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்கள், கணினிகள் மற்றும் கட்டடம் ஆகியவை அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த விபத்து குறித்து, லேண்ட்லைன் பிரிவு இயக்குநர் விவேக் பன்சால் சனிக்கிழமை ஆய்வு செய்தார். சீரமைக்கும் பணியில் பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள். இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியது: விபத்தில் பாதிக்கப்பட்ட சேவைகளில், 75 சதவீதம் சேவைகள் சீர் செய்யப்பட்டுள்ளன. 29 ஆயிரம் தரைவழி தொலைபேசி இணைப்புகளில் (லேண்ட் லைன்) 22 ஆயிரம் இணைப்புகளும், 3 ஆயிரம் பிராட் பேண்ட் இணைப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகவும் சீரமைக்கப்பட்டுள்ளன. துறைமுக அலுவலகத்தின் நேரடி லேண்ட்லைன் இணைப்புகள் மட்டும் சீரமைக்க சிறிது நாள்கள் ஆகும். மீதம் உள்ள அனைத்து இணைப்புகளும் சீர் செய்யப்பட்டுள்ளன.
மொபைல் போன் "2ஜி',"3ஜி' சேவை வழங்கப்படுகிறது. துறைமுக பகுதியில் உள்ள வங்கிகள், ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த சேவை பாதிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.
பி.எஸ்.என்.எல். சேவையை மீண்டும் வழங்க பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இதன்காரணமாக, அடுத்த இரண்டு நாள்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டு விடும். சேதமதிப்பு பொருத்தவரை, சுமார் ரூ.10 கோடி இருக்கும் கணக்கிடப்பட்டுள்ளது என்றனர்.