மழை வெள்ள பாதிப்புக்குள்ளான நீலகிரிக்கு ரூ.30 கோடி உடனடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
சமீபத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு, உடனடி நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 கோடியை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட் டுள்ளார்.
சென்னை: சமீபத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு, உடனடி நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 கோடியை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட் டுள்ளார்.
சமீபத்தில் பெய்த தொடர்மழை, அதனால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான அளவில் பொருட்சேதம் உண்டாகியுள்ளது.
இந்நிலையில் நீலகிரிக்கு உடனடி நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 கோடியை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்டுகிறது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகையை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உடனடியாக மாவட்டத்தில் சேதமடைந்துள்ள உட்கட்டமைப்புகளின் முழுமையான சீரமைப்பிற்கு தேவையான நிதி குறித்த முன்மொழிவுகளை உருவாக்கி, மத்திய அரசுக்கு அனுப்பவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
இயற்கைக் சீற்றத்தில் முழுமையாக சேதமடைந்துள்ள 296 குடிசைகளுக்கு ரூ. 5000 நிவாரணமும், பகுதியாக சேதமடைந்துள்ள 1225 குடிசைகளுக்கு ரூ.4100 நிவாரணமும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளுக்கு பதிலாக பசுமை இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சேதமடைந்துள்ள பயிர்கள் குறித்த முழுமையான விபரங்களை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் சேகரித்து அனுப்ப மாநில தோட்ட கலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.