காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையாண்ட விதம் சிறந்த ராஜதந்திரம் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாதது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. இது குறித்து, தேசிய விருது தேர்வுக் குழுவில் உள்ள நடுவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். காஷ்மீர் விஷயத்தை பாஜக சிறப்பாக கையாண்டதால் கிருஷ்ணர், அர்ஜுனன் என்று உதாரணமாகக் கூறினேன். அதாவது ஒருவர் திட்டமிடுபவர். இன்னொருவர் அதை செயலாற்றுபவர் என்று அர்த்தம். காஷ்மீர் விஷயம் எவ்வளவு பெரிய விஷயம். அது இந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.
பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் ஒரு தாய்வீடாக உள்ளது. இந்தியாவுக்குள் அவர்கள் ஊடுருவ கேட்வே ஆஃப் இந்தியா மாதிரி காஷ்மீர் உள்ளது. அதை நமது கைப்பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒரு ராஜதந்திரமாக முதலில் 144 தடை உத்தரவை கொண்டு வந்து, அங்கு பிரச்னை செய்பவர்களை வீட்டுக் காவலில் வைத்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்க அவர்களை உள்ளே வைத்தனர்.
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பதற்காக அங்கு முதலில் மசோதா நிறைவேற்றி, அதற்கு பின்னர் மக்களவையில் நிறைவேற்றினர். இது சிறந்த அருமையான ராஜதந்திரம். இது குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தால், அதை விவாதப் பொருளாக மாற்றி மசோதா நிறைவேற ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தயவுசெய்து நமது மதிப்பிற்குரிய சில அரசியல்வாதிகள் எதை அரசியலாக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் என்றார்.
அரசியல் கட்சி தொடக்கம் எப்போது?: சித்திரை 1-இல் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறினீர்களே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அதை நான் சொல்கிறேன். அது எப்போது என்று கண்டிப்பாக உங்களை எல்லாம் அழைக்காமல், சொல்லாமல் இருக்க மாட்டேன். பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.