வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், வேலூர், விருதுநகர், மதுரை உள்பட சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என்றார்.
மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வேலூரில் 170 மி.மீ. மழை பதிவானது. கடலூரில் 130 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 110 மி.மீ., விழுப்புரத்தில் 100 மி.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 90 மி.மீ., தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தலா 80 மி.மீ., கடலூர் மாவட்டம் பண்ருட்டி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, அரியலூர் மாவட்டம் செந்துறை, திருவாரூரில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.