தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதில், தமிழக முதல்வருடன் பங்கேற்க உள்ளதாக வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) புறப்படுகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
துபை மற்றும் அமெரிக்காவின் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரங்களில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வுகளில், தமிழக முதல்வருடன், நானும் துறையின் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி கொண்டுவரப்படும் என்று தமிழக முதல்வர் பேரவையில் அறிவித்திருந்தார். இத் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.