புது தில்லி: தமிழகத்தில் அமையவுள்ள ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லியில் கடந்த செப்.26- ஆம் தேதி நடைபெற்ற சுகாதாரத் துறை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில், நாடு முழுவதும் புதிதாக தொடங்க உள்ள 31 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கு 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
அதன்படி திருப்பூர், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை கடந்த அக்.23 அன்று மத்திய சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது புதிதாக அமையவுள்ள கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் கிடைக்கவுள்ளன.
இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 4,250-ஆகவும் அதிகரிக்க உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அமையவுள்ள ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து செவ்வாயன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.