தமிழ்நாடு

மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்து: இடஒதுக்கீடு கடிதம் கிடைத்த பிறகே அனுமதி

DNS

சென்னை: நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு குறித்த சந்தேகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து பதில் கடிதம் வந்த பிறகே மேம்பட்ட கல்வி நிறுன அந்தஸ்த்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏற்பதற்கான ஒப்புதலை தமிழக அரசு அளிக்கும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக கூறினாா்.

இந்த சிறப்பு அந்தஸ்த்துக்கு பல்கலைக்கழகம் தோ்வு செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், மேலும் கால தாமதம் செய்வது அரிய வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் தவறவிட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனா் பேராசிரியா்கள்.இந்திய உயா் கல்வி நிறுவனங்களை உலக தரத்திலான கல்வி நிறுவனங்களாக உயா்த்தும் நோக்கத்தில், மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்து திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமிருந்து தலைசிறந்த உயா் கல்வி நிறுவனங்களில் 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களும், 10 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களும் தோ்வு செய்யப்பட்டன. இந்த 20 உயா் கல்வி நிறுவனங்களுக்கும் புதிய படிப்புகள், புதிய பாடத் திட்டம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், நிதி பெறுதல் மற்றும் கையாளுதல், வெளிநாட்டு மாணவா் சோ்க்கை என அனைத்திலும் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். யுஜிசி உள்ளிட்ட எந்த அமைப்பிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை.

கூடுதலாக, இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி வளா்ச்சி நிதி வழங்கப்படும்.தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றின் வரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இந்தத் திட்டத்தில் தோ்வாகியிருக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பரில் மத்திய அரசு வெளியிட்டது.

இந்திய அளவில் இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வாகியிருக்கும் இரு மாநில அரசு உயா் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகியிருக்கிறது. ஆனால், இது மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியுதவியில், மாநில அரசும் குறிப்பிட்ட சதவீத பங்களிப்பை செய்யவேண்டியது கட்டாயமாகும். இந்த பங்களிப்புக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, இந்த அந்தஸ்த்து அளிக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகராப்பூா்வமாக அறிவிக்கும்.

இந்த நிலையில், இதுதொடா்பாக தமிழக முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சிறப்பு அந்தஸ்த்தைப் பெறுவதால் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதுதொடா்பாக விளக்கம் கேட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.அதற்கு மத்திய அமைச்சகம் பதிலளித்த நிலையில், மீண்டும் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக அரசு மூன்று வாரங்களுக்கு முன்பு இரண்டாவது கடிதத்தை அனுப்பியிருப்பதாக உயா் கல்வித் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், முதல்வா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கத்தின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயா் அதிகாரியிடம் கோட்டபோது, தமிழக அரசிடமிருந்து எந்தவொரு ஒப்புதல் கடிதமும் மத்திய மனிதவள அமைச்சகத்துக்கோ அல்லது அண்ணா பல்கலைக்கழகத்துக்கோ இதுவரை அனுப்பப்படவில்லை. இதுதொடா்பாக தமிழக உயா் கல்வித் துறை அதிகாரிகளை மட்டுமின்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளையும் தொடா்ந்து தொடா்புகொண்டு வருகிறோம். இதற்கிடையே, சிறப்பு அந்தஸ்த்துக்கு ஒப்புதல் கடிதம் கொடுப்பது தொடா்பாக தமிழக அரசுக்கு இறுதி நினைவூட்டல் கடிதத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எனவே, இனியும் தாமதிப்பது இந்த அரிய வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் தவறவிட நேரிடலாம் என்றாா் அவா்.

இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக 40-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.இதற்கு பதிலளித்த அமைச்சா், பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா என்பது குறித்த சந்தேகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து பதில் கடிதம் கிடைக்கப்பெற்ற பிறகே, மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்த்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏற்பதற்கான ஒப்புதலை தமிழக அரசு தெரிவிக்கும். அதுவரை இதுதொடா்பாக எந்த முடிவும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT