திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பவர்கிரீட் நிறுவன ஊழியர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டியில் உள்ள பவர் கிரீட் நிறுவனத்தில் அலுவலக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் அன்பரசு (30), இந்த நிறுவனத்தில் டெக்னீசியனாகப் பணியாற்றி வந்தவர் நெய்வேலியைச் சேர்ந்த அருள் ஆனந்த்(26), இந்த இருவரும் திங்கள்கிழமை மணக்கடவு, பச்சாபாளையத்தில் பணிகள் முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம் தாராபுரம்-பழனி சாலையில் உள்ள காட்டம்மன் கோயில் பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக பழனியில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அருள் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த அன்பரசுவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.