புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களான சுப்பிரமணியம் மற்றும் சிவச்சந்திரனுக்கு மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் வீரவணக்கத்தை செலுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் மிகப் பெரிய சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த தாக்குதலில் தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் இன்று தனி விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, சிவச்சந்திரனின் உடல் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதேபோல் சுப்பிரமணியனின் உடல் கயத்தாறு அருகே சவலப்பேரி கிராமத்தில் அவரது குடும்பத்தினரின் சொந்த விளை நிலத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் இவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட பதிவில்,
"புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்!
நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது!
நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது!" என்றார்.