தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. இக்கூட்டணியில் விரைவில் தேமுதிகவும் இணையும் என்றார் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். சென்னை, திருவொற்றியூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க கூட்டணியை பலப்படுத்தும் வகையில் மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறோம். முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட கட்சிகள் கூட்டணியில் இணைவது இயல்பான விஷயம்தான். பா.ம.க.வின் அதிமுக மீதான கடந்த காலக் குற்றச்சாட்டுக்கள் தற்போது அர்த்தமற்றதாகிவிட்டது. இது போன்ற முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட கட்சிகள் இணைவது திமுக கூட்டணியிலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது. பா.ஜ.க தலைமையில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயகக் கட்சியில் நாங்கள் இணைந்து விட்டதாக இதைக் கூறிவிட முடியாது.
தமிழகத்தில் அதிமுக அமைத்துள்ள கூட்டணிக்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்படும். இலை, மலர், பழம் சின்னங்களைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஒருவகையில் இயற்கையான கூட்டணி என்றே கூறலாம். இக்கூட்டணியில் மத்தளமும் (முரசு) விரைவில் இணையும். இதற்காக தேமுதிகவுடன் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் தமிழகத்தில் எவ்வித பலமும் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவை தொகுதிகளை ஒதுக்கீடு செய்திருப்பதை வைத்தே திமுக கூட்டணி வலுவாக இல்லை என்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.