முகப்பு
தமிழ்நாடு

கீழடி அகழாய்வுப் பொருள்கள் சோதனை: வைகையாற்றங்கரையின் நகர, நாகரிகம் 2500 ஆண்டுகள் பழைமையானது: தொல்லியல் துறை ஆணையர்

 சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல் பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் சோதனை செய்ததில் சுமார் 2500 ஆண்டுகள் பழைமையானது என தெரிய வந்துள்ளது என தமிழ்நாடு அரசின்

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:00 pm IST
மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்க தொடக்க விழாவில் பேசுகிறார் தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன்.
பகிர்:


 சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல் பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் சோதனை செய்ததில் சுமார் 2500 ஆண்டுகள் பழைமையானது என தெரிய வந்துள்ளது என தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலரும், தொல்லியல் துறை ஆணையருமான த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தமிழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சார்பில் பயிலரங்க தொடக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தொல்லியல் துறை  ஆணையருமான த.உதயச்சந்திரன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசியது: தமிழகத்தில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகளில் கிடைத்துள்ள தொல் பொருள்களை இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்து உலக அரங்கில் தமிழ்ச் சமூகம் மிகத் தொன்மையான சமூகம் என்பதை வெளிக் கொண்டு வரப்படும்.
கீழடியில் தற்போது நவீன தொழில் நுட்பக் கருவியான டிரோன் மூலம் பூமிக்கடியில் 7 முதல் 10 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேவையான இடங்களில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கீழடியில் விலங்கின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவை டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கத்தில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதை ஆராய்ச்சி செய்த போது சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இந்திய அளவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மிக பழமையான நாகரிகத்தை எடுத்துக் காட்டுகிறது.
அமெரிக்காவில் புளோரிடா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பீட்டா ஆய்வகம் கீழடி பகுதியில் கிடைத்த தொல்பொருள்களை ஆய்வு செய்ததில் 2500 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவாகத் தெரிவித்துள்ளது. ஆகவே கீழடி பகுதி சார்ந்துள்ள வைகையாற்றங்கரையின் நகர, நாகரீகம் சுமார் 2500 ஆண்டுகள்  பழமையானது என தெரிய வந்துள்ளது என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.