தமிழ்நாடு

வானூர்தி தொழில் கொள்கைக்கு அனுமதி: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

DIN


வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கை உள்பட முக்கிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. தொழிற்சாலைகள் விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்புதல்களும் இக் கூட்டத்தில் வழங்கப்பட்டன. 
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழிற்சாலைகள் விரிவாக்கம்: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 23-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடக்கிறது. 
இந்த மாநாட்டின் போது பல்வேறு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்ய உள்ளது. 
இந்த ஒப்பந்தங்களுக்கு முன்பாக, அந்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அடிப்படை அம்சங்களான நிலம், மின்சாரம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் புதிய ஆலைகளைத் தொடங்குவதற்கான அனுமதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
11-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யும் வகையிலான ஒப்புதல்கள் அமைச்சரவைக் கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனங்களுடன் உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும். 
இதுவரை 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிய ஆலைகளைத் தொடங்கவும், ஆலைகளை விரிவுபடுத்தவும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இவை செயல்பாட்டுக்கு வரும்போது தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் அரசால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
நிதிநிலை அறிக்கை: அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சுமார் மூன்றரை மணி நேரம் வரை நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டு வசதி, உயர்கல்வித் துறைகள் தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தரைதளக் குறியீட்டின் அளவு 1.5 மடங்கில் இருந்து 2 மடங்காக உயர்த்தப்பட்டது. 
இவ்வாறு உயர்த்தப்பட்டாலும், கட்டடங்களின் பாதுகாப்புத் தன்மைக்காக விதிகள் வகுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அந்த விதிகளுக்கான ஒப்புதல்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வானூர்தி, பாதுகாப்பு கொள்கை: வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறை உபகரணங்கள் தயாரிப்புக்கான தனித்த கொள்கை வெளியிடப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. 
இந்த கொள்கை இறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை எதிர்வரும் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT