சென்னை: தலைமைச் செயலகத்தில் ஞாயிறு அதிகாலை துணை முதல்வர் ஓபிஎஸ் யாகம் நடத்தினார் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூரில் திமுக எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் உறவினர் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது ஞாயிறு அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் ஒன்று நடத்தியிருப்பதாகவும், என்ன காரணத்தின் பொருட்டு அவர் அந்த யாகத்தை நடத்தினார் என கேள்விகள் எழுவதாகவர் அவர் பேசி இருந்தார்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிறு அதிகாலை துணை முதல்வர் ஓபிஎஸ் யாகம் நடத்தினார் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக ஸ்டாலின் கூறுவது ஆதாரமற்றது. அவர் பார்த்தாரா? அல்லது யாரேனும் பார்த்த ஆதாரம் உள்ளதா? இவ்வாறு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக் கூடாது. அதிமுக எந்த சூழ்நிலையிலும் அதன் தனித்தன்மையை இழக்காது.
காலை எழுந்தவுடன் ஆட்சிக்கு எதிராக என்ன சூழ்ச்சி செய்யலாம் என்றே நினைக்கிறார்கள். அதிமுக என்னும் இயக்கத்திற்குள் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்று ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து செய்யும் சதிதான் இது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.