சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் தனித் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், மக்களவைக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தேசிய, மாநில அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலுக்கு அறிக்கை தயாரிக்கவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் குழுக்கள் அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு: தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆா்.பாலு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, திமுக மாநிலங்களவை குழுத் தலைவா் கனிமொழி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளா்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியா் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கூட்டணி பேச்சுவாத்தை குழு: தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.