சென்னை: வீட்டில் பணியாற்றும் 14 வயது மகளை துன்புறுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் தாய் பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிழக்கு கோதாவரி மாவட்டம் சமர்டகோடா காவல்நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், கடந்த 18 மாதங்களுக்கு முன்பு தனது மகளை நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.
கடந்த சில மாதங்களாக பானுப்ரியாவின் சகோதரர் தனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னைக்குச் சென்று அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்து, சிறார் உதவி மையத்தை நாடுமாறு ஆந்திர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து நமது எக்ஸ்பிரஸ் குழுவினர் பத்மாவிடம் பேசுகையில், தனது மகளை பானுப்ரியாவின் வீட்டில் இருப்போர் துன்புறுத்துவதாகக் கூறினார்.
அதில்லாமல், எங்களது மகளை எங்களுடன் அனுப்பவும் மறுக்கின்றனர். மகளை அனுப்ப வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறுவதாகவும், தவறும் பட்சத்தில் வீட்டில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுப்போம் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் வீடு முழுக்க சிசிடிவி கேமரா உள்ளது. அதனை பரிசோதித்தால் உண்மை என்னவென்று தெரியவரும் என்கிறார் பத்மா.
இது பற்றி பானுப்ரியா கூறுகையில், அந்த சிறுமி ஓராண்டுக்குள் மேல் இங்கு வேலை செய்கிறார். எங்கள் வீட்டில் இருந்து ஐபேட், நகைகள், பணம் மற்றும் கேமரா போன்றவற்றை அவர் திருடி தனது தாயிடம் கொடுத்துள்ளார். இதுபற்றி அவரிடம் விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக் கொண்டு திருடிய பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டனர். மீதமிருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்து வருவதாகக் கூறிச் சென்ற பத்மா, இதுபோன்ற பொய்ப் புகாரைக் கொடுத்துள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அந்த சிறுமியின் வயது குறித்து கேட்டதற்கு, பானுப்ரியா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.