சென்னை: முன்னரே தெரிவித்திருந்தபடி இன்று பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது விதி 17B -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைக்களை எடுத்து வந்தது. அதேசமயம் நீதிமன்றத்திலும் இது தொடர்பான பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்ட போது, வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு நீதிமன்றமும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதேசமயம் ஆசிரியர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் உள்ளிட்ட அரசின் பதில் நடவடிக்கைகளும் தீவிரமானது.
இந்த சமயத்தில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக புதன் மாலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முன்னரே தெரிவித்திருந்தபடி இன்று பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது விதி 17B -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முன்னரே தெரிவித்திருந்தபடி இன்று பணிக்குத் திரும்பாத 2710 ஆசிரியர்கள் மீது விதி 17B -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்கள் அவர்கள் இதற்கு முன்பு பணியாற்றிய இடங்களில் பணியாற்ற முடியாது.
முதன்மைக் கல்வி அலுவலர் சுட்டிக்காட்டும் இடங்களில்தான் அவர்கள் பணிபுரியவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.