வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ஆகஸ்டு 5-ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. இதில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அமமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில் ஏ.சி.சண்முகம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவர் தவிர 4 சுயேச்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்வின்போது அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மனுத்தாக்கல் செய்ய 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.
19-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ஆம் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.