காதலி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலை செய்துவிட்டு நாடகமாடி வசமாக சிக்கிய காதலன்
சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் கல்லூரி மாணவி இறந்து கிடந்த வழக்கில், அந்த மாணவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் கல்லூரி மாணவி இறந்து கிடந்த வழக்கில், அந்த மாணவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சௌகார்பேட்டை பழனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் கா.சுமீர் சிங் (23). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சு.காஜல் குமாரி (21). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி இருவரும் அறையெடுத்து தங்கினர். அப்போது, காஜல் இறந்துவிட்டதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து காஜலை மீட்ட போலீஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுமீர்சிங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சுமீர் சிங், தங்களது திருமணத்துக்கு காஜல் பெற்றோர் சம்மதிக்காததால் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், காஜலின் உடல் பிரேதப் பரிசோதனையில், அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாருக்கு சுமீர்சிங் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சுமீர்சிங்கை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர், காஜலின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடியதை அடுத்து, தங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து காஜலுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்.
காஜலை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சுமீர் சிங், போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்கு, தானும் அங்கிருந்த விஷத்தை லேசாக அருந்திக் கொண்டு நாடகமாடியதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக காவலர்கள், சுமீர் சிங்கை வியாழக்கிழமை கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.