தமிழ்நாடு

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை

ENS


கோவை: இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.

கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று அதிகாலை மாநகர காவல்துறையின் உதவியோடு வந்த தேசிய புலனாய்வு அமைப்பினர், போடனூர், உக்கடம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். சிலரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெண் உள்பட 9 பயங்கரவாதிகள், தங்களது உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு இந்த தற்தொலைத் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், உள்ளூர் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது இலங்கை அரசு குற்றம்சாட்டியது. இந்த தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் வழி ஆசிரியர், பள்ளி முதல்வர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தும், பாதுகாப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள தவறியதற்காக, அந்நாட்டின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரவை பணியிடை நீக்கம் செய்தும், பாதுகாப்புத் துறை தலைவர் ஹேமசிறீ பெர்னாண்டோவை பணிநீக்கம் செய்தும் அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

SCROLL FOR NEXT