முகப்பு
தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னையில் அனகாபுத்தூர் பெண்ணுக்கு கத்திகுத்து

தண்ணீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சென்னை புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் பெண்ணுக்கு கத்திகுத்து விழுந்தது.

Updated On : 15 ஜூன், 2019 at 1:41 PM
பகிர்:

தண்ணீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சென்னை புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் பெண்ணுக்கு கத்திகுத்து விழுந்தது.

சென்னை பெருநகரம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புறநகர் பகுதியான அனகாபுத்தூரின் இளங்கோ தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சுபாஷிணி (28) தண்ணீர் பிரச்னை காரணமாக கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அதே குடியிருப்பில் வசித்து வரும் மோகன் என்பவர் தண்ணீர் தொட்டி மோட்டரின் ஸ்விட்சை இரவு 10:25 மணியளவில் ஆன் செய்துள்ளார். அப்போது வெளியே வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன் என்பவர் மோகனிடம் தகராறு செய்துள்ளார்.

Advertisement

அச்சமயம் மோகனின் சத்தம் கேட்டு மனைவி சுபாஷிணி வெளியே வந்து மோட்டரை ஆன் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், தொட்டியில் தண்ணீர் இல்லை என்று கூறி தடுத்து ராமகிருஷ்ணன் சண்டையிட்டார். மேலும் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் தனது வீட்டுக்குச் சென்று கத்தி எடுத்து வந்து சுபாஷிணியை தாக்கியுள்ளார் என்று சங்கர் நகர் போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினர், ராமகிருஷ்ணனைப் பிடித்து பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காயமடைந்த சுபாஷிணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதுதொடர்பாக ராமகிருஷ்ணன் மீது சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமகிருஷ்ணன், பேரவைத் தலைவர் தனபாலின் கார் ஓட்டுநர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.