எடப்பாடி அருகே நேரிட்ட சாலை விபத்தில், காவல் துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன். இவரது மனைவி விஜயா (43). இத் தம்பதியினருக்கு விஷ்ணுப்பிரியா (23) என்ற மகளும், திருலோகசந்தர்(20) என்ற மகனும் உள்ளனர்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராக விஜயா பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், இரு சக்கர வாகனத்தில் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டியிலிருந்து, பூலாம்பட்டி நோக்கிச் சென்றார். எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் பகுதி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விஜயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த விஜயா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸார்வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.