தமிழ்நாடு

சட்டவிரோத பேனர்: வழக்கு நிலுவையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்

DIN


சட்டவிரோத பேனர் விவகாரத்தில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தமிழக அரசால் துரித நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.  
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என கருத்து தெரிவித்து, அரசுத் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் வாதிட்டதாவது: 
சட்ட விரோத பேனர்களைத் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சட்ட விரோத பேனர்களைத் தடுக்கும் வகையில் தமிழக அரசால் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் காரணமாகவே அரசால் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தனர். 
அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை தடுப்பது அரசின் பணி, நீதிமன்றத்தின் பணியல்ல. இப்போதுகூட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களின் பேனர்களை நாள்தோறும் பார்க்க முடிகிறது என்று தெரிவித்தனர். 
அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து, விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT