மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட வாய்ப்பில்லை!
திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவரது 6 ஆண்டு பதவிக்காலம் ஜூன் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Advertisement
ஆனால், அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மன்மோகன் சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதற்கான போதிய பலம் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.
இந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் சமீபத்தில் மரணம் அடைந்ததால், ராஜஸ்தானில் இருந்து மன்மோகன் சிங் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எம்எல்ஏக்களின் பலம் இருப்பதால், திமுகவின் உதவியோடு, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் தேவை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இரண்டு பேர் மாநிலங்களவைப் பதவியைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவைப் பதவி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு பதவி திமுக தொழிற்சங்க பொதுச் செயலர் பி. சண்முகத்துக்குக் கிடைக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் ஜூலை 24ம் தேதியோடு முடிவுக்கு வரவிருப்பதால், திமுக சார்பில் மாநிலங்களவைக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.