தமிழகத்தில் 4 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம், நெய்க்காரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற, மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் அளித்த பேட்டி:
நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றுவோம். திமுகவினர் தேர்தல் அறிக்கையில்தான் சொல்வார்கள். ஆனால், செய்யமாட்டார்கள். பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2-ஆவது கட்டப் பணிகளுக்கு அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன், மெட்ரோ ரயில் 2-ஆவது கட்டப் பணிகள் தொடங்கப்படும். அதைப்போல, கோவை மாநகரத்துக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசு அனுமதி பெற்று, அத் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழகத்தில் 3 அல்லது 4 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்யும் வகையில், பாஜக நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய வுள்ளார்.
நாளை பிரசாரம் தொடக்கம்: சேலம் அருகே கருமந்துறையில் மார்ச் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக ஓரிடத்திலும், பாமக ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. அதாவது 39 தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சிகள், தற்போது மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.
இந்தக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். அமமுக கட்சியை பதிவு செய்திருக்கிறார்களா? அவர்களை ஒரு பொருட்டாக நாங்கள் நினைக்கவில்லை. குழந்தை பிறக்காததற்கு முன்பாகவே பெயர் வைத்த மாதிரி அந்தக்கட்சி இருக்கிறது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி.