விளாத்திகுளம்: ஈசல் கட்சிகள் எல்லாம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய் விடும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் கரிசல்குளம் என்னும் கிராமத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வெள்ளியன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் எங்கள் கூட்டணியில் நாட்டிற்கு நிலையான ஆட்சி தர இம்முறை மோடிதான் பிரதமர் என்று கூறி தேர்தலை சந்திக்கிறோம்.
ஆனால் திமுக கூட்டணியில் யார் பிரதமர் என்று கூறுவதற்கே வழியில்லை.
தேர்தலுக்காக மட்டும் முளைத்திருக்கும் ஈசல் கட்சிகளைப் பற்றிக் கவலை இல்லை. ஈசல் மழைக்காலத்தில் மட்டுமே உருவாகும். அதன் ஆயுள் ஒரு நாள்தான். அதேபோல் இத்தகைய கட்சிகளின் ஆயுள் இந்தத் தேர்தலாடு ஒரு முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.