திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த கோடை மழையால் சுமார் 1 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. மேலும், புறநகர் பகுதிகளில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மே 7-ஆம் தேதி மாலையில் திடீரென கோடை மழை பெய்தது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் போது வீசிய சூறைக்காற்றில், முசிறி பகுதியில் சுமார் 1 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததாகக்
கூறப்படுகிறது. மேலும், திருவெறும்பூர், வாழவந்தான்கோட்டை, துவாக்குடி, அசூர், சோமரசம்பேட்டை பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்ததால் வியாழக்கிழமை காலை வரை மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
மழை அளவு: திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை, அதிகபட்சமாக வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 101 மிமீ மழை பதிவானது. மேலும், நந்தியாறு தலைப்பு பகுதி,முசிறி, சமயபுரம், தேவிமங்கலம், லால்குடி, துறையூர், திருச்சி மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மொத்த மழை அளவு 386 மிமீ ஆகப் பதிவானது.