மதுரை: வெயிலோ மழையோ வாக்குப்பதிவு நாளோ, வாக்கு எண்ணிக்கை நாளோ. எங்களுக்கு அந்தந்த நாளுக்கான தேவை அன்றன்று பூர்த்தியாக வேண்டும். அவ்வளவுதான்.
ஆனால் இவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மாவட்ட நிர்வாகம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்துவிட்டது.
வார இறுதி நாளும், இப்படி விடுமுறையும் ஒன்றாக வந்து சேர்ந்ததால் திக்குமுக்காடிப் போய்விட்டார்கள் குடிகாரர்கள். அதற்காக அப்படியே இருந்துவிட முடியுமா?
அருகில் இருக்கும் அண்டை மாவட்டங்களை நோக்கி படையெடுத்தார்கள். அதன் பலனாக சிவகங்கை மாவட்டத்தில் இருந்த டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. ஒரு கட்டத்தில் நீண்ட வரிசையும் காணப்பட்டது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளில் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வரிசையில் காத்திருந்தவர்கள் அனைவருமே மதுரையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.
இது பற்றி சிலர் கூறுகையில், எங்கள் பகுதியிலேயே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடக்கிறது. அதற்கு பதில் இங்கே வந்து மதுவாங்கிச் செல்கிறோம் என்றனர். சிலர் டாக்ஸி வைத்து மதுரையில் இருந்து சிவகங்கை வந்து மதுபானங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
மதுரை - சிவகங்கை எல்லைப் பகுதியில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மது வகைகளை வாங்கிச் சென்றதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.